8.11.04

இறைவன் உலகத்தைப் படைத்தானா?

படம்- உனக்காக நான்
பாடியவர்-யேசுதாஸ்
எழுதியவர்-கண்ணதாசன்


இறைவன் உலகத்தைப் படைத்தானா?
ஏழ்மையை அவன்தான் படைத்தானா?
ஏழையைப் படைத்தவன் இறைவன் என்றால்
இறைவன் என்பவன் எதற்காக?

பொன்னகை அணிந்த மாளிகைகள்
புன்னகை மறந்த மண்குடிசை
பசி வர அங்கே மாத்திரைகள்
பட்டினியால் இங்கு யாத்திரைகள்

இருவேறுலகம் இதுவென்றால்
இறைவன் என்பவன் எதற்காக?

உயரே பறக்கும் காற்றாடி
உதவும் ஏழை நூல்போலே
பட்டம் போலவர் பளபளப்பார்
நூல் போலே இவர் இளைத்திருப்பார்

இரு வேறியக்கம் இதுவென்றால்
இறைவன் என்பவன் எதற்காக?

இறைவன் இங்கே வரவில்லை
எனவே நான் அங்கு போகின்றேன்
வறுமை முழுவதும் தீர்ந்த பின்னே
மறுபடி ஒருநாள் நான் வருவேன்.

No comments: