21.9.07

கனாக் காணும் கண்கள் மெல்ல

படம் - அக்னி சாட்சி
குரல்கள் - S.P பாலசுப்ரமணியம், சரிதா
இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் - வாலி




கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே!

கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே!
உலாப் போகும் நேரம் கண்ணே!

குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ!

குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ!

நொடியில் நாள் தோறும் நிறம் மாறும் தேவி
விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி!
விளக்கு ஏற்றி வைத்தால் கூட,
நிழல் போலத் தோன்றும் நிஜமே!
நிழல் போலத் தோன்றும் நிஜமே!

“நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்
உன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால்தான்,
உன் நிழல் விழுந்த நிலத்தின் மண்ணைக்கூட
என் நெற்றியில் நீறு போல்,
திருநீறு போல் இட்டுக்கொள்கிறேன்”


கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல

புதிய கவிதை புனையும் குயிலே
நெஞ்சில் உண்டான காயம் என்ன?
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்
பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று,
நிகழ்காலம் கூறும் கண்ணே!
நிகழ்காலம் கூறும் கண்ணே!

கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே!




சரிதா என்றாலே அந்தக் குண்டு கண்கள் சட்டென்று நினைவுக்கு வரும் - கூடவே ஒலிப்பது அவரது குரல். அருமையான குரல் வளம் படைத்தவர் - நிறைய நடிகைகளுக்குக் குரல் கொடுத்திருக்கிறார். இயக்குநர் இமயத்தின் கண்டுபிடிப்பு. 1979-இல் தெலுங்கு மரோசரித்ரா படத்திற்காக நடந்த தேர்வில் 162-வது நபராகப் பங்கேற்கையில் - அவர்தான் நாயகி என்று கே.பி. அவர்களால் தேர்வு செய்யப் பட்டவர். மரோசரித்ராவின் வெற்றியை நாம் அறிவோம். பின்பு ஹிந்தியில் ஏக் துஜே கேலியேவாகவும் அது வந்தது - சரிதாவுக்குப் பதில் ரத்தி அக்னிஹோத்ரி! மரோசரித்ராவில் தனது அபாரமான நடிப்பில் கவர்ந்தாரோ என்னவோ, கே.பி. அவர்களின் 22 படங்களில் சரிதா நடித்திருக்கிறார். அக்னி சாட்சியும் (1982)அதில் ஒன்று.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜுலி கணபதியில் அவரைப் பார்த்தபோது உருவத்தைத் தவிர பெரிதாக வேறு வித்தியாசங்களெதுவும் இல்லாமல்தான் காட்சியளித்தார் - நடிப்பில் அதே தீவிரத்துடன்!

தண்ணீர் தண்ணீர் படத்தில் அவரது நடிப்பை மறந்திருக்க மாட்டோம்!

அக்னி சாட்சியில் சிவக்குமாரும் சரிதாவும் பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப் பாடல் துன்புற்ற உள்ளத்தை ஆறுதல் படுத்தும் மருந்து.

அழும் குழந்தையைத் தேற்றுவதுபோல ஆதரவும் பாசமும் நிரம்பிய குரலுடன் இனிமையாக பாலு பாடியிருப்பார். இடையே வரும் சிறு வசன வரிகளைச் சரிதா பேசியிருக்கிறார். மெல்லிசை மன்னரின் இசையும் வாலியின் வரிகளும் பாடலுக்கு இன்னும் இனிமை சேர்த்த விஷயங்கள்.

தகவல்கள் - வற்றாயிருப்பு சுந்தர்