27.9.06

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்

படம் : ஆடிப்பெருக்கு
குரல் : சுசீலா
வரிகள் : கண்ணதாசன்
நடிகை : சரோஜாதேவி


காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலை மோதும் நிலை கூறவா
அந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

பொருளோடு வாழ்வு உருவாகும்போது
புகழ் பாட பலர் கூடுவார் - அந்த
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார் - வீணில்
விதியோடு விளையாடுவார் - அன்பை
மலைவாக எடை போடுவார்
என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவி பாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார் - கொஞ்சும்
மொழி பேசி வலை வீசுவார் - நட்பை
எளிதாக விலை பேசுவார்
என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)